திங்கள், 25 ஆகஸ்ட், 2008

இணைந்த துருவங்கள்

குயில்கள் அழகாகப் பாடினாலும்
கறுப்பானவை.
கிளிகள் அழகானவை
ஆனால் அவை
வாயைத்திறந்தாலோ எனக்கு
வாந்தி வரும்
கடவுளே
எனக்கு
குயில்போல் பாடும்
கிளி வேண்டும்.

தூக்கசுந்தரி!

சொக்க எறிந்திடும் சுழல்விழியாள்-ஒளி
சுற்றி வளர்ந்திடும் கயல்விழியாள்
பக்கமாகவே வந்தமர்ந்;தாள்-எனைப்
பார்த்து முறுவலைப் பூத்திருந்தாள்.

எங்கையோ கண்டதுபோலிருந்தும்-அது
எந்தன் நினைவுக்கு எட்டவில்லை!
முந்தைப் பிறப்பதன் தொடர்பதுவோ?-இல்லை
மூளும் கனலது வேறெதுவோ??

எட்டி இடைதொடக் கரந்துடிக்கும்-அது
இல்லை முறையென மனந்தடுக்கும்
கட்டிப் பிடித்தவள் கன்னங்களில் -சிறு
காயப்படுத்தினால் சே ..வலிக்கும்.

பெயரைக் கேட்பதில் பிழையில்லையே-கழுத்துப்
பென்ரனும் இனிசியல் சொல்லுகுதே
அயரைப் போலெந்தன் நாவதுவும் -மேல்
அண்ணத்தில் ஒட்டியே காய்ந்ததுவே

எழும்பு நீ என்றெனை உலுக்கியவன்-அட
ஏழரை ஆச்சுது என்று சொன்னான்
அரும்பு மீசையின் காலத்திலே -கனவு
ஆக்கினை கூடவே| என்றான் நண்பன்!

வியாழன், 21 ஆகஸ்ட், 2008

தமிழன் வாழ்வு

ஷெல்லடிக்க ஓடுகிற வாழ்க்கை- பின்னர்
சேருகின்ற அகதி முகாம் சேர்க்கை
பல்குழல்கள் சீறிவர பாரதிரக் குண்டுவிழ
கல்வியது பாழாகிப் போகும்- கண்கள்
காண முன்னர் உடல் விழுந்து சாகும்

வளைய மாட்டன் என்று சொல்லும் பனைகள் - அதன்
வட்டுக்களை சீவும் எறிகணைகள்
வட்டிழந்து போயுமென்ன குற்றுயிராய் ஆயுமென்ன
மொட்டைமரம் வானத்தினைப் பார்க்கும்- தலை
முளைத்து வரும் வடலியினைக் காக்கும்

ஆடுதுலாத் தண்ணியள்ளும் தங்கை- அவள்
ஆயுதத்தில் கையை வைத்தாள் பங்கை
ஓடுகின்ற கள்ளளினை ஒளித்துவரும் கொள்ளையனை
சூடு என்ற மந்திரத்தால் பற்றி – அவள்
சுட்டதிலே எங்களுக்கு வெற்றி!

2006

யாமறிந்த மொழிகளிலே

கந்தரின்ர கடைசிப் பெடி கனடா போயும்
கனகாலம் ஆச்சு அவன் போற வழியில்
சிங்கப்பூர் இறங்கித்தான் சில நாள் நின்று
ஸ்பெயினுக்கால் போய்ச்சேர்ந்தான் சுவிஸைத்தானே

சுவிஸ்காரன் சும்மாவா விட்டானவனை?
துடுக்கென்று திருப்பித்தான் அனுப்பப் பார்த்தான்
தவிக்கின்ற முயற்பாய்ச்சல் பாய்ந்த பெடியன்
தடமாறி யேர்மனிலை தலையை வைத்தான்

யேர்மனிலை உழைக்கேலா தெண்டு சொல்லி
சீவனினைக் காப்பாத்த பிரான்ஸில் பூந்து
கார்வழியே மாறிப்போய் லண்டன் சேரக்
கஷ்டமென்று கனடாவில் காலை வைச்சான்

மூன்று தரம் ஓ எல் இலை கையில் வாங்கி
முழுசித்தான் பிளேன் ஏறிப் போன பெடியன்
தாண்ட இட மொழிகளெல்லாம் தானாண்க் கற்று
தலைகரணமாய்ச் சொல்லும் தகுதி கண்டான்

போனமுறை திருமணத்தை செய்யவென்று
போன பெடி வந்திறங்கி நின்ற போது
ஆனமொழி எல்லாமே அறிந்த பின்னர்
அழகு மொழி தமிழொன்றே என்றான்.

10.04.2004

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

இம்சை
காகிதமும் பேனையுமாக
கதிரையில் உட்கார்ந்தேன்
ஐயோ, இண்டைக்கும்
கவிதை எழுதப்போகிறாயா
கட்டிலில் புரண்டு படுத்தான்
நண்பன்.

அதிர்ஷ்டம்
யார்யாரோ எதிர்பார்த்துக்கொண்டிருக்க
கர்ப்பப் பையிலேயே உனை
தொட்டுத்தூக்கும்
பிரசவ மருத்துவன்.

நன்றிக் கடன்
நன்றி டொக்ரர் என்றபடி
கையில் திணித்தாய்
நான் என்றும் உண்ணாத
முட்டைக் கேக்.

மழலை
சின்ன முத்தத்திற்கு பதிலாக
சிறுநீர் கழித்தாய்
நீயும்
அவளைப்போல
முத்த எதிர்ப்பு முன்னணியை சேர்ந்தவளா?


பனிரோஜா
சிவப்பு ரோஜாவின்
இதழில் வெள்ளைப் பனி
குழந்தை
பால்குடிக்கிறது.




பாவஜீவன்
ஒன்றைவிட்ட ஒருநாள் oncall
செய்தே
களைத்துப்போகிறேன்
ஒவ்வொரு நாளும்
oncall செய்யும்
மன்மதன்
பாவம்!

மருந்து
வயிற்றால் போகாவிட்டால்
வாழைப்பழம் சாப்பிடலாம்
அல்லது
சரஸ்வதியில்
சாப்பிடலாம்.

புதிய பரிமாணம்.
நேற்று சோறு,
இன்று உழுந்துடன் சேர்ந்ததால்
வடை,
நாளை தோசையில் ஒரு கூறு.
மசாலாத் தோசையின்
மகத்துவம் இதுதான்.